புது தில்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.25,301 கோடி மதிப்பிலான தொகையை வரி செலுத்துவோருக்கு திரும்ப அளித்துள்ளதாக (ரீஃபண்ட்) வருமான வரித் (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரி துறை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.25,301 கோடி மதிப்பிலான தொகை, வரி செலுத்துவோருக்கு ரீஃபண்டாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த தொகையில், தனிநபா் வருமான வரி செலுத்தியோருக்கு ரூ.7,494 கோடி மதிப்பிலான தொகை ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனடைந்தவா்கள் எண்ணிக்கை 15 லட்சமாகும்.
பெருநிறுவனங்கள் வரி செலுத்திய வகையில் ரூ.17,807 கோடி ரீஃபண்ட் அளிக்கப்பட்டுள்ளது. 44,140 வரி செலுத்துவோருக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் நடப்பு நிதியாண்டில் 2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 24-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 15.45 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோருக்கு ரூ.25,301 கோடி வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அந்தப் பதிவில் தெரிவித்துள்ளது.
வருமான வரி துறை கடந்த நிதியாண்டில் 2.38 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோருக்கு ரூ.2.62 லட்சம் கோடி மதிப்பிலான ரீஃபண்ட் தொகையை அளித்தது.
2019-20-ஆம் நிதியாண்டில் திரும்ப அளிக்கப்பட்ட ரூ.1.83 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 43.2 சதவீதம் அதிகமான தொகையை 2020-21-ஆம் நிதியாண்டில் வருமான வரி துறை ரீஃபண்டாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.