30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அசத்தலான மின்சாரக் காரை டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
வாகன எரிவாயுவின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் படியான வாகனத்தை பல நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றன.
தற்போது, அடுத்தகட்டமாக மின்சாரத்தில் இயங்கும் கார்களையும் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இன்று மின்சாரத்தில் இயங்கும் புதிய வகை கார் பற்றிய அறிமுகத்தை அளித்துள்ளது.
‘அவின்யா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்கலாம் என்றும் வருகிற 2025 ஆம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வரும் எனவும் டாடா மோட்டார்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ‘அவின்யா கான்செப்ட் மின்சார வாகனங்களின் முன்னோடியாக இருக்கும். சிறந்த மென்பொருள் அமைப்புடன் உருவாக்கபட்டுள்ளது. அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதியால் மின்சார உபயோகத்தின் நேரத்தையும் குறைக்கக்கூடியது. அவின்யா கான்செப்ட் என்பது நிறுவனம் எதை நோக்கமாக வைத்திருக்கிறது என்பதற்குச் சான்றாக இருப்பதுடன் மின்சார வாகனங்களின் செயல்பாட்டை வழிநடத்தும் ஒன்றாகவும் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.