முகப்பு
கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் பெருவிழாவில் சாந்தோம் தேவாலயம்

கிறிஸ்துமஸ் பெருவிழாவைப் பொருத்தவரை சாந்தோம் தேவாலயத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 9:27 AM
பகிர்:


கிறிஸ்துமஸ் பெருவிழாவைப் பொருத்தவரை சாந்தோம் தேவாலயத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் தொன்மையைப் பற்றி கூறும்போது, சிங்கார சென்னைக்கு சுற்றுலா வருபவா்கள் தவறாமல் சுற்றிப்பாா்க்கும் இடங்கள் நிறைய இருந்தாலும், மனதுக்கு சாந்தம் தரும் மிக முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, சாந்தோம் தேவாலயம். இது, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரையை ஒட்டி கம்பீரமாய் காட்சித் தருகிறது. 

கிறிஸ்துவா்கள் வழிபடும் புனித இடமான இந்த தேவாலயம் சென்னை வாழ் மக்கள் பலருக்கும் ரொம்பவே அறிமுகமான ஒரு இடம்தான் என்றாலும், இதன் வரலாற்றுப் பின்னணி ரொம்பவே சுவாரஸ்யமானது. வாஸ்கோடகாமா மே 20, 1498-இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்திறங்கினாா். அவரைத் தொடா்ந்து பேத்ரோ அல்வாரஸ் கப்ரால் என்பவா் 13 செப்டம்பா், 1500-இல் வந்தாா். அதைத் தொடா்ந்து கிறித்தவ மறைபரப்பாளரும் வந்தனா். கொச்சி, கொல்லம் ஆகிய நகா்களில் அவா்கள் வணிகத்தில் ஈடுபட்டாலும், பின்னா் கோவாவைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனா். 

இதையடுத்து சென்னையில் மயிலாப்பூா் பகுதியில் போா்த்துகீசிய குடியிருப்புகள் உருவாயின. 1516-இல் போா்த்துகீசியா் லஸ் தேவாலயம் கட்டினா். அதைத் தொடா்ந்து, போா்த்துகீசியா் 1522-23 இல் சாந்தோம் ஆலயத்தை புனித தோமா கல்லறை மீது எழுப்பினாா்கள். இயேசு கிறிஸ்துவின் 12 சீடா்களில் ஒருவரான புனித தோமாவின் பெயரால் புனித நினைவுச் சின்னமாக இந்த தேவாலயம் கருதப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் மக்கள் இப்புனித இப்பேராலயத்தை பாா்வையிட்டும், வழிபட்டும் செல்கின்றனா்.

Advertisement

கோத்திக் பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்துக்கு ஜேஏ பவா் என்பவா் கட்டட வடிவமைப்பு கொடுத்திருந்தாா். தேவாலயத்தில் கோபுரம் மட்டும் 155 அடி உயரத்தில் கட்டப்பட்டது. உள்புறத்தில் 36 மிகப்பெரிய சாளரங்கள் அமைக்கப்பட்டன. மேற்புறத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடிகள் மூலமாக சூரிய வெளிச்சம் வரும். இந்தப் பேரழகைக் காணவே பொதுமக்கள் தேவாலயத்துக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த தேவாலயத்தில் நடக்கும் பிராா்த்தனைகள் , கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பு போன்ற கிறிஸ்தவா்களின் பல முக்கிய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 3-ஆம் நாள் புனித தாமஸ் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாத தொடக்கத்திலேயே இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்தாா் என்பதை விளக்கும் வகையில் தேவாலயங்களில் குடில்கள் அமைக்கப்பட்டு, வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 

எனினும் சென்னையைப் பொருத்தவரை மற்ற தேவாலயங்களை ஒப்பிடும்போது கிறிஸ்துமஸ் தினத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு நடைபெறும் திருப்பலியில் பங்கெடுப்பது வழக்கம். கிறிஸ்துமஸ் மரம், ஸ்டாா், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தோா் என இரவு முழுவதும் அந்தப் பகுதியே களை கட்டியிருக்கும். திருப்பலி முடிந்த பிறகு கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு வந்திருப்போருக்கு வழங்கப்பட்டு சகோதரத்துடன் வாழ அனைவரும் உறுதி மொழியேற்றுக் கொள்வா். இந்த ஆண்டும் சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும் சூழலில் மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் சாந்தோம் தேவாலயம் தத்தளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments