ஜிகர்தண்டா' படத்தின் மொழிமாற்று உரிமம் தொடர்பான பிரச்னையில் ரூ. 5 கோடி கேட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு தொடர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சித்தார்த்-லட்சுமி மேனன் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தை தயாரித்த ‘பைவ் ஸ்டார் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் கலைச்செல்வி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜிகர்தண்டா தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்குத் தெரியாமல் அந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை விற்க முயல்வதாகவும், அப்படத்தின் உரிமை தன் வசமே இருப்பதாகவும் அந்த வகையில் தனக்குச் சேரவேண்டிய சம்பளப் பாக்கி மற்றும் நஷ்டஈடாக ரூ. 40 லட்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் கார்த்திக் சுப்புராஜ். ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழிமாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் விற்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவும் வாங்கியிருந்தார். இதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். தடை உத்தரவை நீக்கக்கோரி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஜிகர்தண்டா படப்பிடிப்பினை வேண்டுமென்றே தாமதப்படுத்திய வகையில் ரூ. 1 கோடியே 36 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் எங்கள் நிறுவனத்தை கார்த்திக் சுப்புராஜ் இழிவுபடுத்தும் விதமாக செய்திகள் பரப்பியதால் தெலுங்கு டப்பிங் உரிமையை இன்று வரை விற்கமுடியவில்லை. இந்த வகையில் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கெனவே எங்களுக்கு கொடுத்துவிட்டார். மேலும் தடை உத்தரவையும் சென்னை நீதிமன்றம் நீக்கி உள்ளது. எங்கள் மீது தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வரும் கார்த்திக் சுப்புராஜ் மீது நிறுவனத்தின் சார்பாக ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.