லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு!
தவறான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் போன்ற காரணங்களால் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து
கோச்சடையான் படத்துக்காக கடன் வாங்கியது தொடர்பான பிரச்னையில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ரஜினி நடித்த கோச்சடையான் படம் சென்ற வருடம் வெளியானது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்கிறவரிடம் ரூ. 14 கோடியே 90 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்கு முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டிருந்தார்.
கடன் தொகையில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை மட்டுமே தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்தார். மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முரளி மனோகர் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது நிதி மோசடி புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
Advertisement
இதனையடுத்து, லதா ரஜினிகாந்த், 'தி பப்ளிஷர்ஸ் அன்ட் பிராட்காஸ்டர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் இந்தியா ' என்ற செய்தி நிறுவனத்தின் மூலம் இந்தப் பிரச்னை தொடர்பாக செய்தி வெளியிட 76 ஊடகங்களுக்குத் தடை வாங்கினார்.
இந்த அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பெங்களூரு நகர காவல்துறை, பெங்களூரு பிரஸ் கிளப்பிடம் விசாரித்தது. இந்த அமைப்பு பெங்களூருவில் இருப்பதாக தெரியவில்லையென்றும் இந்த அமைப்புக்கும் பெங்களூரு பிரஸ்கிளப்புக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பிரஸ் கிளப் கூறியது.
இதைத் தொடர்ந்து, தவறான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் போன்ற காரணங்களால் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடன் வழங்கிய ஆட் பீரோ நிறுவனத் தலைவர், பெங்களூரு நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.