சிவகார்த்திகேயனைத் தாக்கியது யார்? கமல் தீவிர விசாரணை!
சிவகார்த்திகேயனும் ஸ்ருதிக்கு எதிராக எதுவும் பேசிவிடவில்லை. அந்த விழாவிலேயே இருவரும்...
மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயனைத் தாக்கி கோஷம் போட்டவர்கள் யார் என்று கமல் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மதுரைக்கு வருகிறபோது கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் வந்தார்கள்.
மதுரை விமான நிலையத்திலிருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தபோது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். ரஜினிமுருகன் படத்தில் நடித்ததற்காகவும் ஸ்ருதியைத் தவறாகப் பேசியதற்காகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோஷம் எழுப்பியவாறு சிவகார்த்திகேயனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்களின் உதவியுடன் அவர், காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினார். இதனால் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. தன்னுடைய ரசிகர்கள் சிவகார்த்திகேயனைத் தாக்கவில்லை என்று கமல் பேட்டியளித்தார். சிவகார்த்திகேயனும் இப்பிரச்னையை மேலும் வளரவிடாமல் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொன்னார். இந்தச் சம்பவம் குறித்த செய்தியும் அதன் வீடியோவும் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகின.
Advertisement
இதுகுறித்து கமல் தரப்பில் கூறியதாவது: சம்பவம் தொடர்பாக கமல் வருத்தத்தில் உள்ளார். சிவகார்த்திகேயன் மீது அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் கிடையாது. சிவகார்த்திகேயனும் ஸ்ருதிக்கு எதிராக எதுவும் பேசிவிடவில்லை. சிலை திறப்பு விழாவிலேயே இருவரும் நன்றாகப் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். சிவகார்த்திகேயனைத் தாக்கி, அவர் பின்னால் ஓடியவர்கள் தன்னுடைய ரசிகர்கள்தானா என்று உறுதிபடுத்துவதற்காக விமானநிலைய சம்பவம் குறித்து கமல் தீவிரமாக விசாரித்து வருகிறார். அவர் ஒருபோதும் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை ஆதரித்தது இல்லை என்று கூறினார்கள்.