படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள்! ‘எமர்ஜென்சி’ குறித்து கங்கனா ரணாவத்
‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பஞ்சாப், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் எதிர்ப்பு...
இந்திரா காந்தியின் அரசியல் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பஞ்சாப், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் எதிர்ப்பு எழுந்ததால் மேற்கண்ட இடங்களில் பல திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இது குறித்து, கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று(ஜன. 20) வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது, “எமர்ஜென்சி படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி. நம் படத்துக்கு நீங்கள் மிகுந்த அன்பும் மதிப்பும் அளித்துள்ளீர்கள். இதற்கு வெறும் வார்த்தைகளால் நன்றி செலுத்த முடியாது.
எனினும், இன்னும் என் மனதில் வேதனை இருக்கிறது. நான் நடித்த படங்கள் பஞ்சாபில் பெரும் வரவேற்பைப் பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் இன்று, என் படம் அங்கு திரையிட அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல, கனடா, பிரிட்டனில் தாக்குதல் சம்பவங்களும் சில நிகழ்ந்துள்ளன. ஒரு சிலர், இந்த சர்ச்சை நெருப்பைப் பற்ற வைத்துள்ளனர். அதில் நீங்களும் நானும் எரிந்து வருகிறோம்.
என்னுடைய கொள்கைகள், என் தேசத்தின் மீது நான் கொண்டிருக்கும் பற்று ஆகியவை இந்த திரைப்படம் மூலம் நிரூபனமாகியுள்ளது. நீங்கள் இப்படத்தை பாருங்கள்; அதன்பின், இது நம்மை ஒன்றிணைக்கிறதா அல்லது பிரிக்கிறதா என்பதைக் குறித்த முடிவுக்கு வாருங்கள்” என்று பேசியுள்ளார்.