தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கி கௌரவிப்பு!
தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சிறந்து விளங்குவோருக்காக பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கலையில் சிறந்து விளங்கியதற்காக இயக்குநர் சத்யஜித் ரே, நடிகர்கள் சிவாஜி கணேசன், ஷாருக் கான், கமல்ஹாசன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் கல்கி கோச்லின் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே வழங்கப்படும் என பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் இன்று(நவ.13) நடைபெற்ற விழாவில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருதினை வழங்கி கௌரவித்தார்.
தோட்டா தரணி, இரண்டு தேசிய விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் ஒரு கேரள மாநில விருது உள்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மேலும், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தோட்டா தரணி, மணிரத்னத்தின் நாயகன், தளபதி, இந்தியன், சலங்கை ஒலி, சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் மிகப் பிரமாண்டமான செட்களை அமைத்ததிலும், சமீபகாலமாக குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.