விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகளின் கல்விச்செலவை ஏற்றார் விஷால்!
விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகளின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார்.
விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகளின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 15 -க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஓட்டுநர்கள் வரிசையாக நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒரு ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த திருத்தணியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சட்டக் கல்லூரி மாணவர் விகாஸ் (22), அவரது உறவினர் சரண் (24) ஆகியோர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில், சட்டக் கல்லூரி மாணவர் விகாஸ் அண்மையில் நடந்த கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகளின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார். மறைந்த ஆறுமுகத்தின் மகள் (வயது 7) கல்விச் செலவை தன்னுடைய தேவி அறக்கட்டளை பொறுப்பேற்கும் என விஷால் அறிவித்துள்ளார்.