என் தற்கொலைக்கு மாமனாரே காரணம். என் காதலியைப் புதைத்த இடத்தின் அருகே என் உடலையும் புதைத்துவிடுங்கள் என்று தற்கொலை செய்துகொண்ட நடிகை நந்தியின் கணவர் கார்த்திகேயன் கடிதம் எழுதியுள்ளார்.
விருகம்பாக்கம் எஸ்.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (29). இவர் தியாகராயநகரில் நவீன உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். கார்த்திகேயன் நடத்தும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு தியாகராயநகரைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை நந்தினி (27) அடிக்கடி வருவார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நந்தினி, தியாகராயநகரில் வசிக்கும் தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர்.
இப்பிரச்னையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கார்த்திக், சிகிச்சை பெற்று வந்தார். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திங்கள்கிழமை கார்த்திக் தங்கினார். வெகுநேரமாகியும் அறை திறக்கப்படதால் விடுதி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே கார்த்திக்கை தேடி அவரது குடும்பத்தினர் அங்கு வந்தனர். அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக், குளியலறையில் குளிர்பானத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விடுதியில் போலீஸார் சோதனை நடத்தியதில் கார்த்திக் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடித்ததில், தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என எழுதியிருந்ததன் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகை நந்தினி இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நானோ என் தந்தையோ கார்த்திக்கின் தற்கொலைக்குக் காரணமல்ல. என் தந்தை அவருக்கு நிறைய உதவி செய்துள்ளார். வேலை வாங்கித் தருவதாக அவர் நிறைய பேரிடம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் சொன்னபடி செய்யாததால் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்கள். இதனால் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு நான் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். ஏற்கெனவே அவருக்கு வெண்ணிலா என்கிற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதால் அவரை காவல்துறை கைது செய்தது. அவர் துபாய் போயிருக்கிறார் என்று சொல்லி நான் சமாளித்தேன். பணப் பிரச்னையால் அவர் மன உளைச்சலில் இருந்தார். பிரச்னையெல்லாம் தீர்த்துவிட்டு வா, ஒன்றாக வாழலாம் என்று அவரிடம் கூறியிருந்தேன். அதற்குள் இதுமாதிரி ஆகிவிட்டது என்று பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்வதற்கு முன்பு காவல்துறைக்கும் தனது சகோதரிக்கும் கடிதம் எழுதிவைத்துள்ளார். அதன் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதிய கடிதத்தில், அம்மாவை நீ பார்த்துக்கொள். எனக்கு வாழத் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாகத்தான் வாழ்ந்தேன். என்னால் வாழ முடியவில்லை. என் கெளரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, வெண்ணிலாவைப் புதைத்த இடத்தின் அருகே என்னையும் புதைத்துவிடுங்கள் என்று எழுதியுள்ளார்.
காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன்தான். அவர் பணத்துக்காக என்னையும் என் மனைவியையும் பிரித்துவிட்டார். நான் மனைவியுடன் போனில் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர் தடுத்துவிட்டார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை செய்துகொண்டுள்ளேன். என் சாவுக்குக் காரணம் என் மாமனார் தான் என்று எழுதியுள்ளார்.