செவாலியே கமலுக்கு மோடி தலைமையில் பாராட்டு விழா: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த விஷால்!
செவாலியே விருது பெற்றுள்ள நடிகர் கமலுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடத்த உத்தேசித்துள்ள பாராட்டு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமையேற்க..
சென்னை: செவாலியே விருது பெற்றுள்ள நடிகர் கமலுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடத்த உத்தேசித்துள்ள பாராட்டு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமையேற்க வேண்டுமென மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு பற்றி நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வரும் நிலையில், தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைந்த அளவிலேயே வரி விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
Advertisement
அத்துடன் திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இணையதளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தடுக்கும் வகையில், ISP (Internet Service Provider) தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் உதவி தேவைப்படுவது பற்றியும் தெரிவித்துள்ளோம்.
ப்ரெஞ்ச் அரசு நடிகர் கமலுக்கு செவாலியே விருது அளித்துள்ளது. கொடுத்து கவுரவித்துள்ளது. அதற்கு அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அந்த விழாவானது பிரதமர் மோடி தலைமையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.