விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், பிக் பாஸ் நிகழ்ச்சி அடித்தட்டு மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாகவும் உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஆபாசமாக உடையணிந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி சமூகத்துக்குக் கேடானது என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இந்த வழக்கில் தமிழக அரசைச் சேர்க்கத் தேவையில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கமல் தரப்பில் கூறப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான புகார்களை மத்திய தகவல், ஒளிபரப்பு துறையின் கவுன்சிலிடம் மட்டுமே தெரிவிக்கவேண்டும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.