முகப்பு
செய்திகள்

என் ரசிகர்கள் ஜூலி, சக்தியைத் தொந்தரவு செய்யவேண்டாம்: நடிகை ஓவியா வேண்டுகோள்! (வீடியோ)

மற்றவர்களைத் தொந்தரவு செய்து அன்பு காண்பிக்கத் தேவையில்லை. அப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்குத் தேவை கிடையாது...

Updated On : 18 ஆகஸ்ட், 2017 at 11:16 AM
பகிர்:

மற்றவர்களைத் தொந்தரவு செய்து என்மீது ரசிகர்கள் அன்பு காண்பிக்கத் தேவையில்லை. அப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்குத் தேவை கிடையாது என்று நடிகை ஓவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா, வீடியோ வெளியாக ரசிகர்களுக்குச் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளேன். இப்போதுதான் எனக்குக் கிடைத்த ஆதரவையும் வரவேற்பையும் புரிந்துகொண்டுள்ளேன். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கஷ்டமான விஷயம் ஒன்று நடந்துவருகிறது. பிக் பாஸிலிருந்து ஜூலி, சக்தி ஆகியோர் வெளியே வந்துவிட்டார்கள். அவர்களுடைய நிலைமையை யோசித்துப்பார்க்கும்போது மனம் வேதனையடைகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 பேரில் சிலர் என்னைத் தனிமைப்படுத்தினார்கள். அது ஓகே. அதனால் நான் எவ்வளவு வேதனையடைந்தேன் எனத் தெரியும். அதிலேயே நான் மனமுடைந்துவிட்டேன். 

Advertisement

அவர்கள் (ஜூலி, சக்தி) வெளியே வந்தபிறகு அவர்களை எல்லோரும் இழிவுபடுத்துகிறார்கள். இது நல்ல விஷயம் இல்லை. தயவுசெய்து அப்படிப் பண்ணவேண்டாம். அந்தச் சாபம் எனக்குத் தேவையில்லை. இது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது. எல்லோருமே தான் தவறு செய்கிறார்கள். இந்த உலகில் சரியான நபர் என்று யாரும் கிடையாது. நான் உள்பட. தவறு செய்தால்தான் மனிதர்கள். தவறு செய்யாவிட்டால் அவர்கள் விலங்குகள். விலங்குகளுக்குத் தவறு செய்யத் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்கு மனது கிடையாது. மனிதர்களுக்குத்தான் மனது இருக்கிறது. மனசாட்சி இருக்கிறது. 
இங்குக் கற்பழித்தவர்கள், கொலை செய்தவர்களை எல்லாம் நம் அரசாங்கமே மன்னிப்பு அளிக்கிறது. எனவே இது ஒரு விஷயமே கிடையாது. எனவே அவர்களைத் (ஜூலி, சக்தி) தொந்தரவு செய்யவேண்டாம். என் மீதான உங்களுடைய அன்பு, பாதுகாப்பு, ஆதரவு எல்லாமே புரிகிறது. ஆனால் மற்றவர்களைத் தொந்தரவு செய்து என்மீது அன்பு காண்பிக்கத் தேவையில்லை. அப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்குத் தேவை கிடையாது. எனவே தயவு செய்து அதுபோல செய்யவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதினார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இந்நிலையில் காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது எதிர்பாராத திருப்பம்.
 
நடிகை ஓவியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓவியா, ஜூலி வெளியேறிய பிறகு பிக் பாஸ் குடும்பத்தினரிடையே பெரிய அளவில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவதில்லை. இதனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்று பார்வையாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன. 

இதையடுத்து வைல்ட் கார்ட் வழியாக இந்நிகழ்ச்சியில் ஓவியா மீண்டும் கலந்துகொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதற்கு ஓவியா சம்மதம் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.