நடிகை பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் நாளை (ஆகஸ்ட் 23) பெங்களூருவில் திருமணம் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்யவிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 24-ம் தேதியன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இருவரின் பெற்றோர்களும் கவனித்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நடிகை பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. நட்பு காதலாகி நீண்ட காலமாக காதலர்களாக இருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்தை பற்றி சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பிரியாமணி கூறியது 'நாங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். எனவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்ய இருவருமே தீர்மானித்து உள்ளோம்’ என்றார்.
‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜா தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. இயக்குனர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை, குரு,’ போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரியாமணி தற்போது கன்னடத்தில் ‘டனா கயோனு’ என்ற படத்திலும் ‘சைலன்ட் ரேடியோ’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 'திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். இந்த மாத இறுதியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. அதன் பின்பும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளேன்' என்றார் பிரியாமணி.