ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தில் நடித்தார் தனுஷ். அது அவருடைய முதல் ஹிந்திப் படம். அதன்பிறகு ஷமிதாப் படத்தில் நடித்த தனுஷ் மீண்டும் ஆனந்த் எல். ராயுடன் இணைந்து மற்றொரு ஹிந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.
அதுகுறித்து தனுஷ் கூறியதாவது:
வெற்றிமாறனுடனான உறவு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்றால் ஆனந்த் எல். ராயுடனான உறவு அன்பினால் உருவானது. இருவரும் அதீத அன்பு வைத்துள்ளோம். நான் அவருக்காகவும் அவர் எனக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனந்த் எனக்கு மூத்த சகோதரர் போல. ராஞ்சனா படப்பிடிப்பின்போது என் மீது மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். அவருடைய மனைவி என்னுடைய இன்னொரு தாய் போல. என் இதயத்தில் இருவருக்கும் சிறப்பான இடம் உள்ளது.
இருவரும் இணைந்து மற்றொரு படம் செய்யவுள்ளோம். அடுத்த வருட இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஷாருக் கான் நடிப்பில் ஆனந்த் இயக்கி வரும் படம் முடிந்தபிறகு எங்களுடைய படம் தொடரும் என்று கூறியுள்ளார்.