கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த கேரள நடிகை, காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
கேரள உயர் நீதிமன்றத்தில் முன்பு தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 24-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் சார்பாக ஜாமீன் கோரி புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திலீப்புக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அவர் அழிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, திலீப்புக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக திலீப்பின் ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக திலீப் தரப்பு கூறியுள்ளது.