கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிய படங்கள் வெளிவருவதால் அருவி படத்தை உடனடியாகத் திரையரங்கில் பார்க்குமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நல்ல வசூலைப் பெற்று வந்தாலும் வருகிற வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அருவி படம் பல திரையரங்குகளிலிருந்து வெளியேறுகிற சூழல் உருவாகியுள்ளது. காரணம், இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய படங்கள். இதையடுத்து அருவி படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
தங்களுடைய பகுதிக்கு அருகில் அருவி படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்பவர்களுக்கு - சிறிய படங்களுக்கு முன்பே திரையரங்குகள் கிடைக்காது. இப்போது கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியாகும் படங்களால் இதற்குப் பிறகும் இடம் இருக்காது. தமிழ்நாட்டிலும் பெரிய படங்கள் சிறிய படங்களின் திரையரங்குகளைக் கடத்திவிடும். எனவே முந்துங்கள். இன்னும் 2 நாள்கள்தான் உள்ளன என்று கூறியுள்ளார்.
வருகிற வெள்ளியன்று சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா ஆகிய படங்கள் வெளியாகின்றன.