தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதினார். இதை இயக்குநர் சேரன் மறைமுகமாக விமரிசனம் செய்துள்ளார்.
நடிகர் விஷால், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள், தமிழக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். உத்தரப் பிரதேசத்திலும், மகாராஷ்டிரத்திலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் கடன்களை தள்ளுபடி செய்து, விவசாயிகளின் எதிர்காலத்தை தாங்கள் வளமாக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் விஷால் தெரிவித்தார்.
இதையடுத்து விஷாலின் கடிதத்தைச் சாடுவதுபோல இயக்குநர் சேரன் ட்விட்டரில் கூறியதாவது:
ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலைகொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கைவிடுவார்கள். அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச்சொல்லுங்க. விவசாயம் நம் அத்தியாவசியத்தேவை என்பதை உணரும்போதே அது வளரும். வசதிக்கு கார், பங்களான்னு வச்சிருக்கோம்..சோத்துக்கு சொந்தபூமி வச்சிருக்கமா? என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.