டோலிவுட்டின் க்யூட் ஜோடியான நாகா சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இந்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி திருமணம் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இவர்களின் நிச்சயதார்த்தத்தின் போதுதான் நெருங்கிய வட்டாரத்துக்கும் நண்பர்களுக்கும் இவர்கள் காதல் விவரம் தெரிய வந்தது.
சிறியதாக ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள் இந்தக் காதல் பறவைகள். சமீபத்தில் நடந்த 64-வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்வில் சமந்தா அவ்வகையில் பேசியது அனைவரின் கவனத்தை கவர்ந்தது. நிகழ்ச்சியில் இவ்விருதை வாங்குவது தனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை பகிர்ந்து கொண்டார் சமந்தா.
அப்படி என்ன சொன்னார் சமந்தா?
வருங்காலத்தில் சைதன்யாவுடனான திருமணத்துக்குப் பிறகு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையிடம் உன் அப்பாவைப் போல் அம்மாவும் ஒரு ஸ்டார் தான். இந்த விருதுதான் அதற்கு சான்று என்று தன் குழந்தையிடம் பெருமையாக சொல்வதற்கான ஒரு விஷயமாக இந்த வெற்றியை நினைக்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசினார் சமந்தா.
ஃபிலிம் ஃபேர் விருதினை நான்காம் முறையாக சமந்தா பெற்றுள்ளார். ஈகா, நீதானே என் பொன் வசந்தம், யே மாயா சேஸாவே ஆகிய படங்களைத் தொடர்ந்து A..Aa எனும் படத்துக்குத் தற்போது விருது வாங்கியுள்ளார் சமந்தா.
நடிப்பில் மட்டுமின்றி அழகான பேச்சிலும் சமந்தா சமத்துப் பொண்ணு என்பது உண்மைதானே?