பாடகி சுசித்ராவுக்கு நேர்ந்தது என்ன? கணவர் விளக்கம்!
பாடகி சுசித்ராவுக்கு நேர்ந்துள்ளது குறித்து அவருடைய கணவரும் நடிகருமான கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதன் காரணத்தையும் சுசித்ராவுக்கு நேர்ந்துள்ளது குறித்தும் அவருடைய கணவரும் நடிகருமான கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு பலரும் தங்களுக்குத் திரையுலகில் நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக எழுதிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதைச் சரிகட்டும் விதமாக சுசித்ராவின் செல்பி புகைப்படமும் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனால் பயங்கர குழப்பம் ஏற்பட்டது.
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பிரபல நடிகர், நடிகைகள், டிவி தொகுப்பாளினியின் அந்தரங்கப் புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பு உண்டாகியது. பிறகு அப்புகைப்படங்கள் அகற்றப்பட்டன. தன்னுடைய ட்விட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பாடகி சுசித்ரா கூறினார். இருந்தும் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து நேற்றிரவு சர்ச்சைக்குரிய பதிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
Advertisement
பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து சுசித்ராவின் சர்ச்சைப் பதிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த இக்கட்டான நிலையில் சுசித்ராவின் கணவரும் நடிருமான கார்த்திக், இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவு செய்யப்படுபவை குறித்து சரியான புரிதல்களுடன் அணுகி எனக்குப் பக்கபலமாகப் பலரும் உள்ளார்கள். அந்தப் பதிவுகளில் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் என்னிடம் வந்து விளக்கம் கேட்டு மிகுந்த புரிதல் உணர்வுடன் செயல்பட்டார்கள். அவர்களிடம் மிகுந்த வெளிப்படையுடன் நான் சொன்னது - சுசித்ரா தற்போது உணர்வெழுச்சி நிலையில் உள்ளதன் வெளிப்பாடே அந்தப் பதிவுகள். சுசித்ராவின் நிலையை முழுவதுமாகப் புரிந்து பிரச்னையைச் சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்துவருகிறோம். எனவே, தற்போது உணர்வுகள் அதீதமாக வெளிப்பட்ட நிலையில் அவர் வெளியிடும் பதிவுகளில் உண்மைத்தன்மை குறைவாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு, என்மீது அன்பு செலுத்தி நிலைமையைச் சுமூகமாக்கி வருகிறார்கள். இதில் தனிப்பட்ட பகையெதுவும் இல்லை, உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் பதிவு செய்யப்பட்டவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்படுபவை ஆதாரபூர்வமானவை அல்ல. இதை ஊடகங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். சூழலை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். உங்கள் குடும்பதில் ஒருவருக்கு நேர்ந்தால் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ அதுபோல எண்ண விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பதற்கு நன்று என்று கூறியுள்ளார்.