மதுரை: நடிகர் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், தங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மற்றொரு வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்த மதுரை நீதிமன்ற கிளை அவரது பெற்றோர்கள் என்று கூறும் கதிரேசன் தம்பதிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் படி, தனுஷின் அங்க அடையாளங்களை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி மருத்துவ அறிக்கையானது இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.