நேரம் கூடி வரும்போது சந்திப்போம்: இலங்கைத் தமிழர்களுக்கு ரஜினி கடிதம்!
ஈழத்தமிழர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளைத் திறப்பதற்காக ரஜினி இலங்கைக்கு செல்ல இருந்தார்...
நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும்போது சந்திப்போம் என்று இலங்கைத் தமிழர்களுக்கு ரஜினி கடிதம் எழுதியுள்ளார்.
லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளைத் திறப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல இருந்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இலங்கைக்கு ரஜினிகாந்த் செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் ரஜினியின் வருகை ரத்தானதால் கவலையடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
Advertisement