மும்பை: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது.
கபாலிக்கு பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் 'காலா' . இந்த படத்தினை ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
'காலா' படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி முதல் மும்பையில் தொடங்கப்படும் என படக்குழு முன்னரே அறிவித்தது. அதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார்.
''காலா ' படப்பிடிப்பானது இன்று காலை சிறு பூஜையுடன் தொடங்கியது. இந்த தகவலை நடிகர் சமுத்திரக்கனி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி பகுதியில் இந்த படப்பிடிப்பு நடைபெறுவதால் படக்குழுவினருக்கு கடுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரத்தியேக படங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே: