இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிக்கும் ஆர்கே நகர்!
இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி பட நிறுவனத்தின் 2-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி பட நிறுவனத்தின் 2-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகறி படத்தை இயக்கிய சரவணன் ராஜன் இயக்கும் இப்படத்துக்கு ஆர்கே நகர் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பெயரிடப்பட்டுள்ளது. வைபவ், சானா அல்தாப் போன்றோர் நடிக்கிறார்கள். வில்லனாக சம்பத் நடிக்கிறார். இப்படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.
Advertisement
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடிச் சோதனை நடத்தி பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா மற்றும் தொகுதியில் நிலவும் அசாதாரண சூழல் ஆகியவற்றை முன்வைத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இப்படித் தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஆர்.கே. நகரைத் தற்போது தலைப்பாகப் பயன்படுத்தி படத்தின் மீது கவனம் குவியும்படி செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.