3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு பற்றி...
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான விவாதம் 15- 18 மணி நேரம் நடைபெறும் என்றும் வாக்கெடுப்பு நாளை(ஏப். 17) மாலை நடைபெறும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று(ஏப். 16) தொடங்கியது.
அதன்படி தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் அறிமுகமாகின. இந்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.
Advertisement
இதையடுத்து வாக்கெடுப்பு முறையில் 3 மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மசோதாக்களை தாக்கல் செய்ய ஆதரவாக 251 உறுப்பினர்களும் எதிராக 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தொடர்ந்து, மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கி நடைபெற்றது வருகிறது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான விவாதம் 15- 18 மணி நேரம் நடைபெறும் என்றும் இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை(ஏப். 17) மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியள்ளார்.
முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெறும். தேவைப்பட்டால் விவாத நேரத்தை மக்களவைத் தலைவர் நீட்டிப்பார், வாக்கெடுப்பு நாளை மாலை நடைபெறும்" என்று கூறினார்.
மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த சிறப்பு அமா்வு நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா நிறைவேறினால் தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பு வலுத்துள்ளது.