கேளிக்கை வரியை ரத்து செய்யும் திட்டம் அரசிடம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு
கேளிக்கை வரியைக் குறைக்கவோ ரத்து செய்யவோ அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு...
திரைத்துரையின் கோரிக்கையின்படி, கேளிக்கை வரியைக் குறைக்கவோ ரத்து செய்யவோ அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் பேசியது: தற்போதைய சூழலில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியோடு, தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியையும் சேர்த்து 40 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சினிமா தொழில் நசிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இதில், தமிழக அரசின் முடிவு முக்கியமானதாக அமைந்துள்ளது. உடனடியாக கேளிக்கை வரி முழுவதையும் நீக்கினால்தான் சினிமா தொழில் இயல்பான நிலைக்கு வரும்.
வரியை முழுமையாக நீக்குவது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துப் பேசவுள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை முதல்வர் நேரம் ஒதுக்கி தந்துள்ளார். அப்போது எங்களின் கோரிக்கையை வலியுறுத்திப் பேசுவோம். எங்களால் கேளிக்கை வரியை செலுத்த முடியாத சூழல் இருப்பதை முதல்வருக்கு தெளிவுபடுத்துவோம் என்றார்.
இந்நிலையில் விஷாலின் கோரிக்கை குறித்து தமிழக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:
கேளிக்கை வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ தற்போது எந்த திட்டமும் அரசிடம் இல்லை. 10% கேளிக்கை வரி விதிக்கப்பட்டாலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதால் திரைத்துறைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.