முகப்பு
செய்திகள்

கூடுதல் கட்டணம்: "மெர்சல்' திரைப்படத்தை வெளியிட தடை கோரி மனு

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், "மெர்சல்' உள்ளிட்ட புதிய படங்களை வெளியிட தடைக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், "மெர்சல்' உள்ளிட்ட புதிய படங்களை வெளியிட தடைக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: முன்னணி நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்களை திரையிடும்போது முதல் 5 நாள்களுக்கு திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த கூடுதல் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. யும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த "மெர்சல்' படம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்துக்கு முதல் 5 நாள்கள் தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டணம் வசூலிக்க திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு. எனவே, திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். மேலும், இந்த மனு நிலுவையில் உள்ள வரை "மெர்சல்' படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்குப் பொதுநல நோக்குடன் உள்ளதால், வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் பட்டியலிட பதிவுத் துறைக்கு நீதிபதி பரிந்துரைத்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →