முகப்பு
செய்திகள்

நடிகை அஞ்சலி எனக்கு அக்கா தான்: அஞ்சலியின் மறுப்புக்கு நடிகை ஆராத்யா விளக்கம்!

நான் அவருடைய சகோதரி இல்லை என அவர் கூறலாம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காக உண்மை மாறாது... 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

சிலவருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி கடத்தப்பட்டதாக அவருடைய சித்தி பாரதி தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியது ஞாபகம் உள்ளதா? 

படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற அஞ்சலி, அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் மாயமானார். இதையடுத்து அஞ்சலி கடத்தப்பட்டதாகப் பரபரப்பு கிளம்பியது. இதையடுத்து பேட்டியளித்த அஞ்சலி, சித்தி பாரதி தேவி என்னைப் பணம் காய்க்கும் மரமாக எண்ணுகிறார். இம்சிக்கிறார். எனவே என் இஷ்டத்துக்கு வாழ முடிவு செய்துள்ளேன் என்று கூறினார். அஞ்சலி கூறுவது தவறு. காதலன் சொல்லிக்கொடுத்தபடி பேசுகிறார் என்று பதிலுக்குப் பேட்டியளித்தார் பாரதி தேவி. பிறகு, இந்தப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இதையடுத்து அஞ்சலி மற்றும் அவரது சித்தி பாரதி தேவி இடையேயான உறவு முறிந்தது. 

இந்நிலையில் அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் மகள் ஆராத்யா, நடிகையாக அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவருக்குப் படங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அஞ்சலி என்னுடைய சகோதரி என்று பேட்டியளித்தார் ஆராத்யா. இதனால் அஞ்சலியின் சகோதரி திரையுலகில் அறிமுகமாகிறார் என்று செய்திகள் வெளியாகின.

இதனால் கடுப்பான அஞ்சலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே உள்ளார். அவர் திருமணமாகி மகிழ்ச்சியுள்ளார் என்கிற தகவலைப் பகிர்ந்தார். பிறகு தனது அக்காவின் புகைப்படத்தையும் பகிர்ந்து, ஆராத்யாவின் பேட்டிக்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் அஞ்சலியின் இந்த நடவடிக்கைகள் குறித்து பதில் அளித்துள்ள ஆராத்யா, என் அக்காதான் எனக்குப் பெரிய ஊக்கமாக இருப்பவர். கடின உழைப்பால் முன்னணி நடிகையாக அவர் உயர்ந்திருப்பது நான் திரையுலகில் நுழைய முக்கியக் காரணம். அவருடைய வளர்ச்சியைக் கண்டுதான் நான் திரையுலகில் நுழைந்துள்ளேன். நான் அவருடைய சகோதரி இல்லை என அவர் கூறலாம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காக உண்மை மாறாது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →