வசூலைத் தவிர நடிகர்களின் திறமை பற்றி பேச ஒன்றுமில்லையா?: ரசிகர்களின் மோதல் குறித்து தயாரிப்பாளர்!
வசூல் குறித்து சண்டையிடும் ரசிகர்களுக்கு நடிகர்களின் நடிப்பு மற்றும் அவர்கள் நடித்த படம் குறித்து பேச ஒன்றுமில்லையா...
வசூல் குறித்து சண்டையிடும் ரசிகர்களுக்கு நடிகர்களின் நடிப்பு மற்றும் அவர்கள் நடித்த படம் குறித்து பேச ஒன்றுமில்லையா என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கேள்வியெழுப்பியுள்ளார்.
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியதாவது:
வசூல் நிலவரத்தைக் கண்காணிப்பவர், திரைப்பட விமரிசகர், ஊடகவியலாளர் - போட்டியினால் இந்த எல்லா பொறுப்புகளும் ஒன்றாகிவிட்டன. பார்வையாளர்களுக்கு அவர்கள் தேவையில்லாத தகவல்களைத் தருகிறார்கள். இப்போது படத்தின் உள்ளடகத்தை விடவும் வசூல் குறித்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். படத்தின் உள்ளடக்கம், நடிகர்களின் திறமை குறித்தெல்லாம் ரசிகர்களுக்குப் பேச ஒன்றுமில்லையா? பயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
பொங்கல் சமயத்தில் வெளியான படங்கள் சரியான வசூலைப் பெறவில்லையென்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சமூகவலைத்தளங்களில் வசூல் குறித்த விவாதங்கள் உருவாகியுள்ளன. இதையடுத்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.