உதவிக்கு வராமல் வேடிக்கை பார்ப்பது மனிதத்தன்மையற்றது: நடிகை சனுஷா விவகாரம் குறித்து சசிகுமார்!
பெண்கள் மீதான பாலியல் வன்முறை கண்டிக்கத்தக்கது. ஆனால் உடனடியாக உதவிக்கு வராமல் வேடிக்கை பார்ப்பது...
நடிகை சனுஷா, கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்துள்ளார். ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று, கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி விரைவு ரயிலில் 23 வயது சனுஷா பயணம் செய்தார். தன்னுடைய பெர்த்தில் அவர் படுத்திருந்தபோது பக்கத்துக்கு பெர்த்தில் இருந்த ஆண்டோ போஸ் என்கிற கன்னியாகுமரியைச் சேர்ந்த 40 வயது நபர், சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளார். இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல்துறையிடம் சனுஷா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆண்டோ போஸ் கைதானார். எனினும் இந்தச் சம்பவத்தின் போது தனக்கு உதவி செய்ய சக பயணிகள் முன்வரவில்லை என்று கூறியுள்ளார் சனுஷா.
இச்சம்பவம் பற்றி சனுஷா பேட்டியளித்ததாவது:
இதைப் பெரிதாக்கவேண்டாம் என அந்த நபர் என்னிடம் கெஞ்சினான். எனக்குக் கீழே உள்ள பெர்த்தில் படுத்திருந்தவரிடம் உதவி கோரினேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு உதவுமாறு கதறினேன். ஆனால் அந்த கோச்சில் இருந்த பெண்கள் உள்பட யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதிகாலை 1.10 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது. திரைக்கதையாசிரியர் உன்னி மற்றும் மற்றொரு சக பயணி என இருவர் மட்டுமே என் உதவிக்கு வந்தார்கள். என்னை மிகவும் காயப்படுத்துவது என்னவென்றால், ரயிலில் இருவர் தவிர வேறு யாரும் அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் அதை நேரில் காணும்போது அமைதியாக நகர்ந்துவிடுகிறார்கள். பாலியல் தொல்லையால் அவதிப்பட நேர்ந்தால் பெண்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். காலதாமதம் கூடாது. இப்படியொரு சம்பவம் நடந்தபிறகும் எனக்கு யாரும் உதவாதது குறித்து மிகவும் மனமுடைந்துள்ளேன். இந்தச் சமூகத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறியுள்ளார்.
சனுஷா நடித்த கொடிவீரன் பட நாயகனான நடிகர் சசிகுமார் இச்சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
பெண்கள் மீதான பாலியல் வன்முறை கண்டிக்கத்தக்கது. ஆனால் உடனடியாக உதவிக்கு வராமல் வேடிக்கை பார்ப்பது மனிதத்தன்மையற்றது. பெண்ணின் பொதுவெளி சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்று சனுஷாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.