தயாரிப்பாளர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: ரூ. 1 கோடி கேட்டு நடிகர் விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ்!
தயாரிப்பாளர் ஒருவர் மீது தனது ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகர் விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: தயாரிப்பாளர் ஒருவர் மீது தனது ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகர் விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி என்பவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களில் ஒருவர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இவர் நடிகர் விஷாலுக்கு எதிர் அணியியில் இருந்து வேலை பார்த்தார். இவர் தற்பொழுது "மிக மிக அவசரம்" என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் நடிகர் விஷால் தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாக, விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வக்கீல் மூலம் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனது தயாரிப்பில் உருவாகி வரும் "மிக மிக அவசரம்" படத்தின் கதை திருடப்பட்ட கதை என்று, நடிகர் விஷாலின் தூண்டுதலின் பேரில் அவரது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவன தயாரிப்பு நிர்வாகி ராஜசேகர் மற்றும் அவரது ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் வாட்ஸப் குழுமங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்துஅவதூறு பிரசாரங்களை செய்து வருகின்றனர். எனவே நடிகர் விஷால் உள்ளிட்ட முவரும் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.