முகப்பு
செய்திகள்

வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும்?: விஷால் முன்வைக்கும் கோரிக்கைகள்!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்பட...

Updated On : 29 மார்ச், 2018 at 5:45 PM
பகிர்:

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்தது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில்
திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை.

Advertisement

இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தொடர்ந்து வரும் வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும்? புதிய தமிழ்ப் படங்கள் எப்போது வெளிவரும்? இதுகுறித்து விஷால் ஒரு பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய துப்பறிவாளன் படத்துக்கு விபிஎஃப் கட்டணமாக மட்டும் ரூ. 90 லட்சம் கட்டினோம். தமிழ்நாட்டிலுள்ள 1112 திரையரங்குகளில் பெரும்பாலானவர்கள் இ சினிமா புரொஜக்டர்களைத்தான் வைத்துள்ளார்கள். மல்டிபிளெக்ஸ் உள்ளிட்ட சில திரையரங்குகள் டி சினிமா புரொஜக்டர்கள் வைத்துள்ளார்கள். நாங்கள் மாஸ்டரிங் கட்டணம் மட்டுமே வழங்கவேண்டும். புரொஜக்டர்கள் அவர்களுக்குச் சொந்தமானது என்பதால் அவர்கள்தான் விபிஎஃப் கட்டணத்தை அளிக்கவேண்டும். 12 வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் தான் விபிஎஃப் கட்டணத்தை அளிக்கவேண்டுமா?

டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், அடுத்த ஒருவருடம் இ-சினிமாக்களுக்கு விபிஎஃப் கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஏப்ரல் 2019 வரை அவர்களுக்குக் கால அவகாசம் அளித்துள்ளோம். டி சினிமாக்களுக்கு ஏப்ரல் 2020 வரை கால அவகாசம். டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், அவர்களுடைய வணிக முறையை மாற்றம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அது தமிழ்த் திரையுலகுக்கு உதவியாக இருக்கும். அதுவரை விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்களும் திரையரங்கு அதிபர்களும் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வோம். டிக்கெட் விற்பனையை முழுவதும் கணிணி மயமாக்க வேண்டும். இதற்குத் திரையரங்குகள்ஒப்புக்கொண்டுள்ளன. ஜூன் 1-க்குள் இதைச் செய்து முடிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி அனைத்து விஷயங்களிலும் மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும். எனினும் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதால் விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.