ஒருநாள் உங்கள் அன்பையும் பெறுவேன்: மட்டம் தட்டிய ரசிகருக்குப் பக்குவமாகப் பதில் அளித்த நடிகர் பிரசன்னா
ரசிகரின் கருத்து ஒன்றுக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் சமூகவலைத்தளங்களில் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது...
ரசிகரின் கருத்து ஒன்றுக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் சமூகவலைத்தளங்களில் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
நடிகர் பிரசன்னா கலந்துகொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கும் சொப்பன சுந்தரி என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். இந்த இரண்டையும் ஒப்பிட்டு மீம் ஒன்று சமீபத்தில் வெளியானது.
இதை முன்வைத்து ரசிகர் ஒருவர் இவ்வாறு ட்வீட் செய்தார். என்னைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன் புத்திசாலித்தமான தொகுப்பாளர். ஒரு தொகுப்பாளராக பிரசன்னாவுக்கு அதிகத் திறமைகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு தொகுப்பாளராக பிரசன்னாவைப் பார்க்கப் போரடிக்கிறது. அவர் ஒரு சுமாரான நடிகர். அதிக வெற்றிகளைக் காணாதவர். தமிழ்த் திரையுலகில் பொழுதுபோக்கை அளிக்கும் சிறந்த நடிகர்களில் சிவகார்த்திகேயன் ஒருவர் என்று பிரசன்னாவை மட்டம் தட்டும் விதமாகக் கருத்து கூறியிருந்தார்.
Advertisement
இதற்குப் பதிலளித்த பிரசன்னா இவ்வாறு கூறினார். நான் போரடிக்கும் தொகுப்பாளராக இருந்தால் அப்படியே இருக்கட்டும். அதை நான் முழுநேரப் பணியாகச் செய்யப்போவதில்லை. நான் சுமாரான நடிகரான இருந்தால் இன்னும் சிறப்பாக நடிக்க எனக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. எனக்கு வெற்றிகள் கிடைக்காமல் இருந்தாலும் அதற்கும் இன்னும் காலம் உள்ளது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதத்தில் காலம் அமையும். அன்பையோ வெறுப்பையோ சம்பாதிக்க ஒரு நொடிதான் தேவைப்படும். ஒருநாள் உங்களுடைய அன்பையும் நான் பெறுவேன் என்று கனிவாகப் பதில் அளித்துள்ளார் பிரசன்னா.
ரசிகர் வெறுப்பேற்றும் விதத்தில் கருத்து வெளியிட்டபோதும் அதைக் பக்குவமாகக் கையாண்ட பிரசன்னாவுக்கு அதிகப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.