முகப்பு
செய்திகள்

பாஜக-வில் உள்ளதால் என்னைக் குறி வைக்கிறார்கள்: மதுபோதையில் கார் ஓட்டிய விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம்

பாஜகவில் உள்ள நிறைய பேருக்கே என்னைப் பிடிக்காது. நான் சில விஷயங்களை வெற்றிகரமாகச் செய்வதால்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

படங்களில் கதாநாயகியாகவும் நடனக் கலைஞராகவும் பணியாற்றி வரும் காயத்ரி ரகுராம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் புகழை அடைந்தார். இந்நிலையில் மதுபோதையில் கார் ஓட்டி வந்த காயத்ரி ரகுராம், ஓட்டுநர் உரிமமும் இல்லாததால் போக்குவரத்துக் காவலர்களின் சோதனையில் பிடிபட்டு பிறகு அபராதம் செலுத்தியதாக செய்தி ஒன்று வெளியானது. இச்செய்தி முற்றிலும் தவறானது என அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விடியோ பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காவலர்கள் யாரும் என்னை வீட்டுக்கு அழைத்து வந்து இறக்கிவிடவில்லை. நான் குடிபோதையில் வீட்டுக்கு வரவில்லை என்று என் அம்மாவே சொல்வார்கள். (காயத்ரி இதுபோல செய்யமாட்டாள். யாரோ வேண்டுமென்றே அவளைப் பழிவாங்குகிறார்கள். கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்று விடியோவில் காயத்ரியின் அம்மா பேசியுள்ளார்). எனக்கு இப்போதும் உடல்நிலை சரியில்லைதான். என்னைக் குறிவைப்பது ஏன் எனத் தெரியவில்லை. என்னிடம் நேரடியாகக் கேட்டு எழுதியிருக்கலாம். நான் குடித்தேன் என்றால் குடித்தேன் என்று சொல்லப்போகிறேன். என்னுடனோ என்னுடன் கூட இருந்தவர்களிடமோ கேட்டு நடந்தது என்ன என்று எழுதியிருக்கலாம்.

Advertisement

நான் பாஜகவைச் சேர்ந்தவள் என்பதால் என்னைக் குறிவைக்கிறார்கள். பாஜகவில் உள்ள நிறைய பேருக்கே என்னைப் பிடிக்காது. நான் சில விஷயங்களை வெற்றிகரமாகச் செய்வதால் பொறாமைப்படுகிறார்கள். இன்னொருவர் முதுகில் குத்தவேண்டாம். ஜூலிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.  அவரைப் பார்த்தே நீண்டநாளாகிவிட்டது. சம்பந்தமில்லாமல் அவரை இதில் கோத்துவிடவேண்டாம். சம்பவம் நடந்த அன்று நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்கு தொடுக்க விரும்பவில்லை. ரத்தப் பரிசோதனைக்கு நான் தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. 

நான் வேகமாகவும் கார் ஓட்டவில்லை. வேகமாக வண்டி ஓட்டுவதென்றால் எனக்குப் பயம். யாராவது அப்படி ஓட்டினாலும் வண்டியிலிருந்து இறங்கிவிடுவேன். பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவேன். என்னைக் குறி வைப்பவர்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தச் செயலுக்குப் பின்னால் பலர் இருக்கிறார்கள் என எனக்குத் தெரியும். எதற்காக இதைச் செய்கிறார்கள் என்பதும் தெரியும். மீண்டும் சொல்கிறேன். காவலர்கள் என்னை வீட்டில் இறக்கிவிடவில்லை. சோதனைக்குப் பிறகு வண்டி ஓட்டிச் செல்ல என்னை அனுமதித்தார்கள். இந்த விளக்கத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்பதால் கூறுகிறேன் என்று அவர் தன் விளக்கத்தை அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments