விஜய்க்கு ஜோடியாக நடிக்காதது குறித்து நடிகை ரேஷ்மிகா ட்வீட்!
விஜய் - அட்லி படத்தில் நான் நடிக்கிறேனா எனப் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தமுறை..
மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். நகைச்சுவை நடிகராக விவேக் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு எனத் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படம் 2019 தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.
முதலில் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கன்னட நடிகை ரேஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தன்னிடம் இந்தப் படம் குறித்து ஆர்வமாக விசாரித்த ரசிகர்களுக்கு ரேஷ்மிகா கூறியதாவது:
விஜய் - அட்லி படத்தில் நான் நடிக்கிறேனா எனப் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தமுறை அது நடக்காததால் அவர்களுடன் அடுத்த முறை இணைவேன் என எண்ணுகிறேன். உங்களிடமிருந்து கிடைத்த ஆதரவு என்னை மிகவும் சந்தோஷமாக்குகிறது. தமிழில் விரைவில் அறிமுகமாவேன். உங்கள் அன்புக்கு நன்றி எனக் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்தப் பதிவில் நன்றி என்று தமிழில் எழுதியுள்ளார் ரேஷ்மிகா.
கர்நாடகாவைச் சேர்ந்த ரேஷ்மிகா, 2016-ல் வெளியான கிரிக் பார்ட்டி என்கிற கன்னப் படமாகத் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான கீத கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தின் ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடலில் நடித்து மேலும் புகழை அடைந்தார்.