முகப்பு
செய்திகள்

மன்னிப்பு கேட்கமுடியாது: ஏ.ஆர். முருகதாஸ் 

முருகதாஸைக் கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவானது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் படம் வெளியான இரு நாள்கள் கழித்து காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். அன்றைய நாளின் நள்ளிரவுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே காவலர்கள் அவரது வீட்டில் குவிக்கப்பட்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

Advertisement

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அரசின் நலத்திட்டங்களை சர்கார் படத்தில் விமரிசித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமரிசிக்க மாட்டேன் என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டது. அரசின் கோரிக்கை குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கமளிக்க உத்தரவிட்டு, முன்ஜாமீன் வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏ.ஆ.ர் முருகதாஸ் தனது விளக்கத்தை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்ததாவது:  இலவசத் திட்டங்களை விமரிசித்தது தொடர்பாக அரசிடம் மன்னிப்பு கேட்கமுடியாது. மன்னிப்பு கேட்பது எனது கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரானது. படத்தில் காட்சிகள் அமைப்பது என் சுதந்தரம். இனிவரும் படங்களில் விமரிசிக்க மாட்டேன் என்றும் உத்தரவாதம் அளிக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

முருகதாஸுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத் தரப்பு வலியுறுத்தியது. இதையடுத்து முருகதாஸைக் கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments