அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து இருவரும் பேட்டியளித்தார்கள். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
இந்நிலையில் சுசி கணேசனின் மனைவி மஞ்சரி, கணவருக்கு ஆதரவாக ட்விட்டரில் எழுதியுள்ளதாவது: நான் என் கணவரின் பக்கம் நிற்கிறேன். லீனா மணிமேகலையின் நன்குத் திட்டமிட்ட, அடிப்படை ஆதாரமற்ற கற்பனையான அவதூறுகளை மறுக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து 15 வருடங்களாகிறது. கொள்கைகளும் மதிப்பீடுகளும் கொண்ட ஒழுக்கமுள்ள நபர் அவர். நல்ல கணவர் மற்றும் அன்பான தந்தை. மீ டூ இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் லீனா போன்றவர்கள் அதைச் சரியான ஆதாரங்கள் இன்றி தவறாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டம். என் கணவர் மீது அவதூறு பரப்பும் லீனா மணிமேகலை மீது ஒரு மனைவியாகவும் தாயாகவும் மகளாகவும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளேன். என்னுடைய வயதான பெற்றோரும் எங்கள் குழந்தைகளும் அனுபவித்த வேதனைகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். உண்மை நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.