முகப்பு
செய்திகள்

சர்கார் படத்தின் கதைக்கருவும் செங்கோல் கதைக்கருவும் ஒன்றே!

இந்தப் பிரச்னை வெளியில் செல்லாமல் நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் முடிவெடுத்தோம். ஆனால்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சர்கார் படத்துக்கு தடை விதிக்கக் கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் எடுத்துள்ளார். இந்தக் கதையை நான் ஏற்கெனவே தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் இதனை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சர்கார் படத்துக்கு தடை கோரி யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்களது தரப்பையும் அழைத்து விசாரிக்க வேண்டுமென சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தரப்பில் ஏற்கெனவே கேவியட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் வியாழக்கிழமை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, இதுதொடர்பாக படத் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

Advertisement

இந்நிலையில் சர்கார் படக்கதைக் கருவும் செங்கோல் கதைக்கருவும் ஒன்றுதான் என தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கூறியுள்ளது. செங்கோல் கதையும் சர்கார் படக்கதையும் ஒன்றே என சங்கம் தனது முடிவை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறது. உங்கள் பக்க நியாயத்துக்காக நீங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குச் செல்வதை நாங்கள் தடை செய்யமாட்டோம் என்று ராஜேந்திரனுக்கு எழுதப்பட்ட கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. பாக்யராஜ் இதை உறுதி செய்துள்ளார். இந்தப் பிரச்னை வெளியில் செல்லாமல் நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் முடிவெடுத்தோம். ஆனால் கதைப் பிரச்னையை முருகதாஸ் ஏற்காததால் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என பாக்யராஜ் பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments