1 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தாதது தொடர்பாக சேவை வரித்துறை தன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் நடிகர் விஷால்.
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சேவை வரித் துறை அதிகாரிகள் அவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பினர். இந்த விவகாரம் குறித்து அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் சேவை வரித் துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சில நாள்களுக்கு முன்பு, சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவீர்கள் என்றால் சேவை வரித் துறை அனுப்பிய சம்மனுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அன்றைய தினம் விஷால் ஆஜராகவில்லை என்றால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
சேவை வரித்துறை தன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் நடிகர் விஷால்.
சேவை வரித்துறை பத்துக்கும் மேற்பட்ட முறை சம்மன் அனுப்பியும் ஏன் நேரில் ஆஜராகவில்லை என விஷாலிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி. தன் மீது சேவை வரித்துறையினர் பொய் வழக்கு தொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார் விஷால். பிறகு வழக்கு விசாரணை நவம்பர் 23 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.