மாநாடு இல்லாவிட்டால் என்ன?: சிம்பு நடித்து இயக்கவுள்ள மகா மாநாடு!
மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சிம்பு நடித்து இயக்கவுள்ள புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது...
மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சிம்பு நடித்து இயக்கவுள்ள புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக, பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். பிறகு இந்த வருடம் ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்துள்ளார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறியுள்ளார்.