சமீபத்தில் நடைபெற்ற தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தலைவர் (ரஜினி) படம் வெளியாகும்போது, போஸ்டர் ஒட்டும்போது சண்டை போட்டுள்ளேன். கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதில் சாணி அடிப்பேன். அப்போது என்னுடைய மனநிலை அப்படி இருந்தது. இப்போது தான் தெரிகிறது, இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று எனப் பேசினார். ராகவா லாரன்ஸின் பேச்சுக்கு கமல் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து, சிறிய வயதில் தெரியாமல் செய்த விஷயம் அது. கமல் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன் என்று விளக்கம் அளித்தார் லாரன்ஸ்.
இந்நிலையில் கமலை நேரில் சந்தித்து தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் லாரன்ஸ். இதையடுத்து ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது:
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய கருத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விமரிசிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது என்று ஏற்கெனவே நான் விளக்கம் அளித்துள்ளேன்.
இன்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல் ஹாசன், என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.
அவருக்கு என் நன்றியையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.