தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது ரஜினியின் 168-வது படமாகும். இந்தப் படத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் மீனா.
கடைசியாக 1995-ல் வெளியான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. அதன்பிறகு, 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார். மேலும் 2011-ல் வெளியான தம்பிக்கோட்டை என்கிற படத்துக்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடிக்கிறார் மீனா. ஆனால் அவர் மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் வருகிறார். தமிழ்ப் படங்களில் நடிக்காத காரணத்தை சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அவர் பேட்டியளித்ததாவது:
தமிழில் நடிக்காமல் மலையாளம், தெலுங்குப் படங்களில் மட்டும் நடிப்பது ஏன் என இத்தனை வருடங்களாக ரசிகர்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நான் இல்லாதது குறித்து அவர்களிடம் வருத்தம் உண்டு. உண்மை என்னவென்றால் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
மலையாளப் படத்தில் கதை வலுவாக இருக்கும். நடிகர்களுக்காக கதையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. யார் நடிக்கிறார்கள் என்பதை விடவும் கதாபாத்திரம் தான் முக்கியம். இதுபோன்று மற்ற மொழிகளில் இல்லை. இந்த மாற்றம் தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் மெல்ல வந்துகொண்டிருக்கிறது. இந்த மாற்றம் அதிகமாகி நான் இன்னும் நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
தலைவர் 168 படம் மிகவும் ஜாலியாக இருக்கும். நான் வருகிற இடங்கள் எல்லாம் கலகலப்பாக இருக்கும். ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.