பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!
ரூ. 50,000 பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை மீரா மிதுன், காவல் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் ரூ. 50,000 பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்றநடவடிக்கி எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு நேரில் ஆஜராக உள்ளதாக மீரா மிதுன் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.