சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படம் ஆகஸ்ட் 8 அன்று வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் எந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக வசூலில் சாதனை செய்யாததால் ஒரு பெரிய வெற்றிக்காக திரையுலகமும் திரையரங்கு உரிமையாளர்களும் காத்திருக்கிறார்கள். அந்த ஏக்கத்தை நேர்கொண்ட பார்வை படம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.