இந்த வாரம் வெளியாகவுள்ள நான்கு முக்கியமான தமிழ்ப் படங்களும் அதன் டிரெய்லர்களும்!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நான்கு முக்கியமான படங்கள் வெளியாகவுள்ளன...
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நான்கு முக்கியமான படங்கள் வெளியாகவுள்ளன.
கொலையுதிர் காலம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேம் ஓவர் என நான்கு படங்கள் ஜூன் 14 அன்று வெளியாகின்ற நிலையில் இதில் எது ஜெயிக்கும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 2-வது படம் - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் - கொலையுதிர் காலம். இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது இந்தப் படம். இதே படம் ஹிந்தியில் காமோஷி என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். இந்தப் படமும் கொலையுதிர் காலம் வெளியாகும் அதே நாளில் வெளியாகவுள்ளது. விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள நான்காவது தமிழ்ப் படம், கொலையுதிர் காலம்.
விக்ராந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் போன்றோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சுட்டுப் பிடிக்க உத்தரவு.
நயன்தாரா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற மாயா படத்தை இயக்கியவர், அஸ்வின் சரவணன். இவர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இறவாக் காலம் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தாப்சி நடிப்பில் கேம் ஓவர் என்கிற படத்தை அவர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஹிந்தியில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்ய்ப இப்படத்தை வெளியிடுகிறார்.
நான்குமே முக்கியமான படங்கள் என்பதால் இந்த வார இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு வேட்டை காத்திருக்கிறது என்று கூறலாம்.