சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் முதலில் நடைபெறுவதாக இருந்த இடத்தில இருந்து, தனது நாடகத்தை இடமாற்றம் செய்ததுடன், நாடகத்தின் பெயரையும் நடிகர் எஸ்.வி.சேகர் மாற்றியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிறன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று காவல்துறை மறுத்துவிட்டது. அதேநேரம் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், 23 ஆம் தேதி தனது 'அல்வா' என்னும் நாடகத்தை நடத்த நடிகர் எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானது. முன்பணத த் தொகை செலுத்தியதற்கான ரசீதையும் எஸ்.வி.சேகர் தரப்பு வெளியிட்டது.
இதனிடையே இடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலைநடத்துவதற்கு தடை விதித்து பதிவுத் துறை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அந்த வழக்கில் சனிக்கிழமை இரவு அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் ஞாயிறு காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் முதலில் நடைபெறுவதாக இருந்த இடத்தில இருந்து, தனது நாடகத்தை இடமாற்றம் செய்ததுடன், நாடகத்தின் பெயரையும் நடிகர் எஸ்.வி.சேகர் மாற்றியுள்ளார்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ள தகவலில் தனது நாடகத்தின் பெயர் ‘காமெடி தர்பார்’ என மாற்றியுள்ளதாகவும், நாடகம் சென்னையில் உள்ள தியாகராஜர் அரங்கில் நடைபெற உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்துமேலும் அவரிடம் மேலும் தகவல் கேட்டதற்கு கூறியதாவது:
நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது, அதனால் மாற்றினேன் நான் ஒன்றும் நீதிமன்றத்திற்கு சென்று நாடகம் இடமாற்றம் பற்றி முடிவு செய்யவில்லை. நடிகர் சங்கம் தரப்பில் தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்றினார்கள். எனவே நாடகம் நடைபெறும் இடத்தை நானும் மாற்றினேன்.
இவ்வாறு அவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.