கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியான பிகில்: படத்தை வெளியிட்ட நடிகர் பிருத்விராஜ் மீது நடவடிக்கை!
கேரளாவில் விதிகளை மீறி அதிக திரையரங்குகளில் விஜய் நடித்த பிகில் படத்தை வெளியிட்டதால் நடிகர் பிருத்விராஜுகுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் விதிகளை மீறி அதிக திரையரங்குகளில் விஜய் நடித்த பிகில் படத்தை வெளியிட்டதால் நடிகர் பிருத்விராஜுகுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
கேரளாவில் பிகில் படத்தை மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டார். படத்துக்கு அதிக வரவேற்பு இருந்ததால் கேரளாவில் 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிகில் படம் வெளியானது. முதல் நாளில் கேரளாவில் ரூ. 4.80 கோடி வசூலித்து கேரளாவில் இந்த வருடம் அதிகமாக வசூலித்த 2-வது படம் என்கிற பெருமையைப் பெற்றது.
Advertisement
ஆனால், கேரளாவில் பிற மொழிப் படங்களை 120 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடக்கூடாது என்று கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த விதிமுறையை மீறி அதிக திரையரங்குகளில் பிகில் படத்தை வெளியிட்டதால் மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிகில் பட வசூலில் ஒரு பகுதியை கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு அளிக்கவேண்டும் என்று மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோருக்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கட்டளையிட்டுள்ளது. இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் வருங்காலத்தில் மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் வெளியிடும் படங்களை வெளியிட மாட்டோம் என்றும் கூறப்பட்டுள்ளது.