'ஒரு அதார் லவ்' என்ற மலையாளப் படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை நூரின் ஷெரீப். இவர் அண்மையில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சமயம், ரசிகர்கள் குழுவால் சூழப்பட்டார்.
சூப்பர் மார்க்கெட் ஒன்றினைத் திறந்து வைக்கும் அந்நிகழ்ச்சியின் போது, அவர் ரசிகர் கூட்டத்தின் இடையே சிக்கிக் கொண்டார். கூட்டத்தினூடே நூரின் மேடைக்குச் சென்று கொண்டிருந்த போது, அந்த ரசிகர்களில் ஒருவர் தற்செயலாக அவரது மூக்கைத் தாக்கினார். வலி தாங்க முடியாததால் நூரின் நடுங்கினார். மேடைக்கு வந்த போது அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பின்னர், அவர் தன்னை ஒருவழியாகத் தேற்றிக் கொண்டு, ரசிகர்களிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார், அவரது மூக்கில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
அவரது தாயார், கேரளாவை தளமாகக் கொண்ட செய்தி ஊடகத்துடன் பேசிய போது, 'மாலை 4 மணிக்கு நிகழ்வு நடக்கவிருப்பதாக அமைப்பாளர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் தயாராகத்தான் இருந்தோம். ஆனால், இன்னும் கூட்டம் வரட்டும் மாலை 6 மணி வரை ஹோட்டலில் காத்திருங்கள் என்று விழா அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்’ என்று கூறினார்.
நடிகையின் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தபின், ரசிகர்கள் சற்று ஆக்ரோஷமாக மாறினர். நூரின் அந்த இடத்திற்கு வந்ததும், அவர்கள் நூரினை சூழ்ந்துவிட்டனர். அவர்களில் சிலர் அவரது காரைத் தாக்கத் தொடங்கிய போது, மற்றவர்கள் தாமதமாக வந்ததால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடினர். இதற்கிடையில், ஒருவரின் கை தற்செயலாக நூரினின் மூக்கில் தாக்கி விட்டது.
இந்ந திடீர் தாக்குதலில் வலி தாங்க முடியாமல் நூரின் கதறிவிட்டார். பார்வையாளர்களிடம் உரையாற்றிய போது இந்த தாமதத்திற்கு தான் காரணம் இல்லை என்றும், தனது மூக்கில் சிறு காயங்கள் இருப்பதாகவும் கூறினார்.