பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஊழியர்களின் நலனுக்காக தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை வழங்குவதாகப் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 59,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் (44), பாலாஜி டெலிஃபிலிம்ஸில் தன்னுடைய ஒரு வருட சம்பளமான ரூ. 2.5 கோடியை கரோனா பாதிப்பினால் வேலை இழந்து வாடும் தனது ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். பாலாஜி டெலிஃபிலிம்ஸில், இணை நிர்வாக இயக்குநராகவும் கிரியேட்டிவ் ஹெட்டாகவும் ஏக்தா கபூர் பணியாற்றி வருகிறார். நடிகர் ஜிதேந்திராவின் மகளான இவருக்கு இந்த வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.