கரோனாவிலிருந்து மீண்டு வந்தார் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி
கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
தானும் தனது குடும்பத்தினரும் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 29 அன்று தானும் தனது குடும்பத்தினரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜமெளலி ட்விட்டரில் அறிவித்தார். மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் கரோனாவிலிருந்து ராஜமெளலியும் அவருடைய குடும்பத்தினரும் மீண்டு வந்துள்ளார்கள். ட்விட்டரில் ராஜமெளலி தெரிவித்ததாவது:
2 வாரத் தனிமைப்படுத்துதலை நாங்கள் முடித்துவிட்டோம். அறிகுறிகள் எதுவும் இல்லை. பாதுகாப்புக்காகப் பரிசோதனை செய்து பார்த்ததில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, எஸ்.எஸ். ராஜமெளலி, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.
அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ் போன்றோரும் நடிக்கிறார்கள். அஜய் தேவ்கன் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரியா சரண் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் உருவாகி வருகிறது.